உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு


உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு
x

நொய்யல் பகுதியில் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

கரும்பு நடவு

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், முத்தனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளுக்கு...

வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

விலை உயர்வு

கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,200-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும் விற்பனையானது.கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story