நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா?


நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

ஒருவருடைய உடல் 'இன்சுலினை' பலன் அளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.

உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.

மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கு அதிகமான மக்களை கொல்கிறது.

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது, அதிக பசி ஏற்படுவது, மிக வேகமாக எடை குறைவது, அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிகக்காலம் பிடித்தல், திரும்ப திரும்ப தோல், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்படுவது, பாதங்களில் உணர்ச்சி குறைவது அல்லது எரிச்சல் ஏற்படுவது தான் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமலும் வருகிறது.

நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் ஆகியவை நடுத்தர வயது கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாகும்.

இதுதவிர அதிகமாக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு நம்மை அழைத்து செல்கிறது.

தற்போது இது ஒரு வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினையாகி வருகிறது. உலக அளவில் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் தரவின்படி, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது 4 மடங்கு அதிகமாகி உள்ளது என்கிறது.

அதிகரிக்கும்

உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019-ம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவீதம் அதிகமாகும்.

18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும். இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட 4 பேரில் ஒருவர் 'டைப்-2' நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

உலக நீரிழிவு தினம்

இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்த அக்கறையோடு உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு இந்நாளை உருவாக்கின.

160 நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரசார இயக்கமான இது, 2006-ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாளாக இருந்து வருகிறது.

தலைநகராக மாறுகிறதா?

இதுகுறித்து பொது மற்றும் குடும்ப நல மருத்துவர் டாக்டர் எஸ்.அமுதகுமார் கூறும் போது, 'நாட்டிலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 'பணக்காரர்களின் நோய்' என்று கூறிவந்த நிலை மாறி 'வெகுஜன நோய்' என்று சொல்லும் நிலைக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது.

தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு கூறும் கணக்கெடுப்பின்படி 20 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நீாிழிவு நோயின் பரவல், கிராமப்புறங்களில் சுமார் 3 சதவீதமும், நகர்புறங்களில் 6 சதவீதமும் இருந்தது. தற்போது கிராமப்புறங்களில் 8 சதவீதமும், நகர்புறங்களில் 14 சதவீதமும் அதிகமாகி விட்டது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் வேலைகளுக்கு செல்லாமல் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இளம் வயதினருக்கும் அதிகம் பரவ ஆரம்பித்துவிட்டது. கலோரி, சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ரசாயன பொடிகள் அதிகம் உள்ள உணவுகள், சுத்தமில்லாத உணவுகளை எந்த கவலையும் படாமல் அதிகமாக உண்பதே தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் பரவ காரணமாகி விடுகிறது. உணவு கட்டுப்பாடு மிக அவசியம் தேவை. தற்போதைய நிலையில் நீரிழிவு நோயின் தலைநகராக தமிழ்நாடு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது'.

உணவு கட்டுப்பாடு

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி கூறியதாவது:-

பொதுவாக காலை உணவுக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு 126 மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அது சர்க்கரை நோயின் முன்னிலை என்று கருதப்படும். காலை உணவு அருந்திய பின்பு பரிசோதனைகள் சர்க்கரை அளவு 200 மி.கி. கீழ் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு என்று உறுதி செய்து கொள்ளலாம். சர்க்கரை நோய் முன்னிலை ஏற்படும் போது உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயால் ரத்தநாள சுவர்கள் பாதிப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, நரம்பியல் நோய் பாதிப்பு, கால் பாத நோய் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தற்போது உள்ள உணவு முறைகளை சர்க்கரை நோய் பாதிப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. பாஸ்ட்புட் சர்க்கரை நோய்க்கு வழி வகுத்து விடும். தினசரி 10 ஆயிரம் அடி அதாவது 4 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். மேலும் முகத்தை எப்படி பாதுகாக்கிறோமோ அதே போன்று காலையும் கால் பாதத்தையும் பாதுகாக்க வேண்டும் சரியான அளவில் காலணி அணிய வேண்டும். குழந்தைகளை பற்றி கேட்கும் பொழுது எப்படி சாப்பிடுகிறார்கள் என்று கேட்பதைவிட எப்படி உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று கேட்பதே மேல். சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின் படி சரியான அளவில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

சிறுதானிய உணவு

நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் ரத்தினவேல்:-

நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு உடல் உழைப்பு குறைவு முக்கிய காரணம். ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது கிராமப்புற மக்களும் விவசாயப் பணிகள் எந்திரமாகிவிட்ட நிலையில், உடல் உழைப்பு குறைந்து விட்ட நிலையில் கிராமங்களிலும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து உணவு முறையும் ஒரு காரணம் ஆகும். ஒரு காலத்தில் சிறுதானியங்களையும், கைக்குத்தல் அரிசியையும் சாப்பிட்டு வந்தோம்.

காலையில் 2 வடை சாப்பிடுகிறார்கள். 2 வடை என்பது 8 இட்லிக்கு சமமாகும். மேலும் தற்போது பாஸ்ட் புட் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. அதிலும் கிராமப்புறங்களில் தற்போது பரோட்டா முக்கிய உணவாக மாறிவிட்டது. இந்த உணவு முறையே சர்க்கரை நோய்க்கு வழி வகுத்து விடும். அடுத்து கடந்த காலங்களில் குடும்ப டாக்டர் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் தற்போது கைக்கு சிகிச்சை எடுக்க ஒரு டாக்டர், காலுக்கு சிகிச்சை எடுக்க ஒரு டாக்டர் என்ற நடைமுறை வந்துவிட்டது. அடுத்தது மன அழுத்தம். இதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நடைபயிற்சி

ராஜபாளையத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெயபிரபா:- நீரிழிவு நோய் என்பது ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களுக்கும் மிக அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. பிரசவ காலத்தில் பெண்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக அளவில் காணப்படுவது இயல்பு. பிரசவத்திற்கு பின்பு சர்க்கரை அளவு பெண்களுக்கு படிப்படியாக குறையும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதற்கு பிறகும் பெண்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு உடல் எடையும் அதிகரித்து சர்க்கரை அளவு கூடி நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். இந்த நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சமைத்து உண்பதுடன், நடைபயிற்சி மேற்கொள்வதும் அவசியம் ஆகும்.

நித்திய கல்யாணி பூ

போத்திலிங்கம்:- நீரிழிவு ேநாய்க்கு டாக்டர்களின் பரிந்துரை படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அதேபோல உணவு பழக்கவழக்கத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடு இருக்க வேண்டும். நடைபயிற்சி அவசியம். வாரத்தில் ஒரு நாட்கள் நித்திய கல்யாணி பூவை நீரில் போட்டு வேகவைத்து அருந்தலாம். எனினும் மனதையும் உடலையும், உணவு கட்டுப்பாட்டையும் தொடர்ந்து பின்பற்றினால் நீரிழிவு நோயினை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

பணக்கார நோய்

பாளையம்பட்டியை சேர்ந்த சங்கிலி:-

நீரிழிவு நோய் என்பது பழங்காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் தற்போது பெரும்பாலானோருக்கு இந்த நோயின் பாதிப்பு உள்ளது. முதியவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இளைஞர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட சரியான உடல் உழைப்பு இல்லாததே காரணம். இளைஞர்கள் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story