கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கேட்பது சரியா?


கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கேட்பது சரியா?
x
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:46 PM GMT)

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதா? என்பது குறித்து கல்வியாளர், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

தேனி

மாநிலப் பட்டியலில் கல்வி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைக்கும் போது, கல்வியை மத்திய பட்டியலில், மாநில பட்டியலில் அல்லது பொது பட்டியலில் இவற்றில் எதில் சேர்ப்பது என்பது நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதியில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதுதான் சரியானது என்று முடிவு செய்து, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்தனர்.

இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அமலில் இருந்த அவசர காலகட்டத்தில் (எமர்ஜென்சி) காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவியல், விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு ஆகிய 5 முக்கிய துறைகள் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இது ஒத்திசைவுப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.

சர்தார் ஸ்வரண்சிங் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் இந்த துறைகளின் அதிகாரங்களில் மாநில சட்டப்பேரவைகளுக்கு இருந்த முழு அதிகார வரம்பு, பொதுப் பட்டியலுக்கு மாறியது.

மீண்டும் கொண்டு வரவேண்டும்

மாநில அரசுகளின் எந்தவித முன் அனுமதியும் இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், அவசர காலத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்று அப்போது முதல் தற்போது வரை விமர்சனத்துக்குள்ளாகிய வண்ணமே இருக்கின்றன.

கல்வித் துறையை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் இதற்கு முன்பு முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி பல ஆண்டுகளாக வலுத்துக் கொண்டே இருந்தாலும், தற்போது வரை கல்வி பொதுப் பட்டியலிலேயே நீடித்து வருகிறது.

கல்வி மாநிலப் பட்டியலில் இல்லாமல், பொதுப் பட்டியலில் இருப்பதால் தான், நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவை மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.

பிரதமரிடம் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்

இதுதவிர, இதுதொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 11.11.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பான கோரிக்கையையும் வலியுறுத்தினார்.

அதில், 'அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த போது முதலில் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அவசர காலத்தின் போது அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், குறிப்பாக பிரதமரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது பற்றி, தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

துன்புறுத்தாத கல்வி

சுந்தர் (தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்) :- கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் தான் மாநில பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுப்பட்டியலில் இருந்தாலும் அதை ஒத்திசைவு பட்டியல் என்கின்றனர். எந்த ஒரு விஷயம் கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு பட்டியலில் இருப்பது போல் தான் செயல்கள் எல்லாம் இருக்கிறது. மாநில அரசை கருத்து கேட்காமல் அதிகாரிகள் மூலம் மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது. மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் வாழும் நிலப்பரப்பின் வரலாறு, கலாசாரம், மலைகள், நதிகள், முக்கிய இடங்களின் சிறப்புகளை தனி பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவற்றுக்கு ஒரு பாதிப்பு வரும்போது மக்கள் விழிப்புடன் இருப்பார்கள். உலக நாடுகளில் கல்வியில் இந்தியா பின் தங்கி இருக்கிறது. மகிழ்ச்சியான குழந்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலிலும் பின்தங்கியுள்ளது. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் கல்வியை விரும்பி கற்பார்கள். குழந்தைகளை துன்புறுத்தாத கல்வி வேண்டும். கல்வி தான் பல விஷயங்களை கொண்டு சேர்க்கும் கருவியாக இருக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசுக்கு சில வாய்ப்புகள் இருந்தாலும் அது பரிசீலிக்கப்படுவது இல்லை. மாநில அரசும் கல்விக் கொள்கை குழு அமைத்துள்ளது. ஆனாலும் தனியார்மயம் குறித்து பேசுவதில்லை. தனியார்மயம் உருவாக்கி இருக்கும் போட்டிகளுக்குள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிக்கிஇருக்கின்றனர். மத்திய அரசு கல்விக் கொள்கையில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று உள்ளது. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்தது. 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது தான் சரியானது. கல்வி மாநில பட்டியலில் தான் இருக்க வேண்டும்.

முன்னேறிய மாநிலம்

உடையாளி (உதவி பயிற்சி அலுவலர், தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம்) :- கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் தான் அந்தந்த மாநிலங்களின் மொழி பாதுகாக்கப்படும். தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு பரவலாக்கப்படும். தாய்மொழியில் கல்வி கற்றவர்களுக்கு அறிவு விசாலமாக இருக்கும் என்பதற்கு ஜப்பான், சீனா, பின்லாந்து போன்ற நாடுகள் எடுத்துக்காட்டு. மத்திய அரசு மும்மொழிக் கல்வியை கொண்டு வருகிறது. தமிழக அரசு இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. மாநில பட்டியலில் கல்வி இருந்தால் தான் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு, அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான தொழிற்கல்விகளை கற்று வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

பாண்டித்துரை (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தேனி மாவட்ட தலைவர்) :- எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கல்வி முறை இல்லை. தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளன. கல்வி மாநில பட்டியலில் இருந்தால் தான் சுதந்திரமான கல்வி, தேவையான பாடத்திட்டங்களை சாத்தியப்படுத்த ஏதுவாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற தொழிற்சார்ந்த கல்வி நிறைய தேவை. தொழிற்கல்வியை பொறுத்தவரை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். அதற்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்த கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை என்பது பின்தங்கிய மாநிலங்களுக்கு சிரமமாக இருக்கும். அல்லது முன்னேறிய மாநிலங்களுக்கு பின்னடைவை கொடுக்க வாய்ப்புள்ளது.

மாநிலத்துக்கு ஏற்ற கல்வி

கருப்பசாமி (இடைநிலை ஆசிரியர், வாழையாத்துப்பட்டி) :- மாநிலங்களுக்கான கல்வி வளர்ச்சியை திட்டமிடவும், நடைமுறைப்படுத்தவும் முழு அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும். ஏனென்றால், கல்வி முறை அந்தந்த மண் சார்ந்தும், மக்களை சார்ந்தும் தான் இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே கல்வி என்றால் அது பல்வேறு இடர்பாடுகளை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் பல மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. மாநில பட்டியலில் இருந்தால் தான் மாநிலத்துக்கு ஏற்றவாறு கல்வியை வடிவமைக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story