தடை விதித்தால் போதுமா? 'பிளாஸ்டிக்' ஒழியுமா?


தடை விதித்தால் போதுமா? பிளாஸ்டிக் ஒழியுமா?
x

எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.

பெரம்பலூர்

எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களை பிரிக்க முடியாமல் செய்கிறது.

பிளாஸ்டிக்கின் வரவால் நாம் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒரு பிளாஸ்டிக் பையின் பயன்பாடு என்பதோ, குறுகிய நேரம் மட்டும்தான். அதன் பிறகு அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளை யாரும் எண்ணி பார்ப்பது இல்லை.

இதை எல்லோரும் தெரிந்தே செய்கிறோம் என்று சுற்றுச்சூழல், உயிரின ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதிலும் அதிகம் படித்தவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகளவில் ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பயன்படுத்த தடை

பிளாஸ்டிக் பொருட்களில் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருப்பவை, 'யூஸ் அன்ட் துரோ' என்று சொல்லப்படுகிற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள்தான். இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததோடு, இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் கொடி, மிட்டாயின் பிளாஸ்டிக் உறை, ஐஸ்கிரீம் குச்சி, அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல், சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள், பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், தெர்மகோல் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், தூக்குபைகள் ஆகியவற்றை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாத்தியமாகி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு, பிளாஸ்டிக் தடையை கண்காணித்து வருகிறது. இதில் அனைத்து துறை செயலாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உள்பட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடி பிளாஸ்டிக் தடை குறித்து விவாதித்து வருகிறது. மேலும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை சமீபத்தில் தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவு வருவதற்கு முன்பே தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தானியங்கி எந்திரங்களும் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மஞ்சப்பை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா என்பது பற்றி பலதரப்பு மக்கள் மற்றும் அதிகாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

100 சதவீதம் ஒழிக்க முடியாது

தமிழ்நாடு-பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன்:- 'சின்ன கடைகள், உற்பத்தியாளர்களை நசுக்குகிறார்கள். பெரிய கடைகள், உற்பத்தியாளர்களை கண்டுகொள்வதில்லை. ஒருசாராருக்கு சாதகமான தடையாக இது இருக்கிறது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை என்று சொல்கிறார்கள். அண்டை மாநிலமான புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத்தில் தடை இல்லை. அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. மோனோ லேயர், மல்டி லேயர் என்று பிளாஸ்டிக் இருக்கிறது. இதில் மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்ய முடியாது. ஆனால் அதற்கு அனுமதி. மறுசுழற்சி செய்யக்கூடிய மோனோ லேயர் பிளாஸ்டிக்குக்கு தடை என்கிறார்கள். காரணம், மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. பிளாஸ்டிக் தடை உத்தரவில் ஒன்று மட்டும் தெரிகிறது. பெரிய நிறுவனங்கள் செயல்பட வேண்டும். சிறிய நிறுவனங்கள் செயல்படக்கூடாது என்ற நோக்கம்தான் அது. பிளாஸ்டிக்கை குறைக்கவேண்டும் என்ற தெளிவு இல்லை. 100 சதவீதம் இதை ஒழிக்க முடியாது. இதற்கு மாற்றாக சிறந்த பொருட்களை விலையில், தரத்தில், உபயோகத்தில் இருக்கும்வகையில் கொண்டுவரவேண்டும். பாக்கு தட்டு, பேப்பர் பை ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். அதைத்தான் மாற்று ஏற்பாடு என்கிறார்கள். ஏற்கனவே இருந்த அந்த பொருட்கள் சரியில்லை என்பதால்தான் மாற்றாக பிளாஸ்டிக் வந்தது. பிளாஸ்டிக் தடை என்பது வெளிநாட்டு நிறுவனங்களின் ஊழல்'.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் ஜெயலட்சுமி:- பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக திகழ்கிறது. கடைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலனோர் துணிப்பை கொண்டு வருவதில்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் கிடைப்பதாலும், வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே துணிப்பை குறித்தும், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடம் அரசு கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக்கின் பயன்பாடு படிப்படியாக குறையும்.

பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்

பெரம்பலூர் அருகே உப்போடையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கார்த்திகேயன்:- மக்கள் பண்டைய காலங்களில் இருந்து வாழை இலையில் சாப்பிடுவதும், துணிப்பைகளில் தாம்பூல பைகள் தருவதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். பித்தளை, சில்வர் போன்றவைகளில் தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்ற முறைகளில் இருந்தவர்கள் தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள் போன்ற எண்ணற்ற வடிவில் செயற்கையை நாடிச் செல்கின்றனர். ஆனால் பிளாஸ்டிக்கால் உருவாகும் பொருட்கள் அனைத்தும் வேதிமுறையில் தயாரிக்கப்பட்டவை. இந்த பிளாஸ்டிக்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாக இருப்பினும் பிளாஸ்டிக்கானது வேதிவினை புரிந்து அவற்றை நாம் பயன்படுத்தும் போது, நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்த்து பல நோய்களுக்கு காரணமாவும், புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது நமது சந்ததியினரையும் வெகுவாக பாதிக்கிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டினை பொதுமக்கள் கைவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகள் தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதும் குறைந்துள்ளது. அவற்றை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் முக்கியமாக பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆயிரம்தான் அரசு தடை விதித்தாலும் மக்களும் அதை மதித்து நடந்தால்தான் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை.


Next Story