வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக கூறி ஒரே நாளில் 2 பேரிடம் பணமோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக கூறி ஒரே நாளில் 2 பேரிடம் பணமோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Feb 2023 6:45 PM GMT (Updated: 27 Feb 2023 6:46 PM GMT)

வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக கூறி ஒரே நாளில் காரைக்குடி மற்றும் மானாமதுரையை சேர்ந்த இருவரிடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை

வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக கூறி ஒரேநாளில் காரைக்குடி மற்றும் மானாமதுரையை சேர்ந்த இருவரிடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறுந்தகவல்

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்தவர் முத்து கருப்பன்(வயது 49). இவருடைய செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கிகணக்கு குறித்த விவரங்ளை பதிவேற்றம் செய்யும்படி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை நம்பிய முத்துகருப்பன் அதேபோல் செய்தார். பின்னர் சற்றுநேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 887 எடுக்கப்பட்டது தெரிந்தது.

இதைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துகருப்பன் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த பணம் மும்பையில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த கணக்கை முடக்கி வைக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் மானாமதுரையை சேர்ந்தவர் சார்லஸ் விஜயகுமார்(39). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருடைய செல்போனுக்கும் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வங்கிக்கணக்கு விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவேற்றம் செய்யும்படி குறுந்தகவல் வந்திருந்தது. தொடர்ந்து சார்லஸ் விஜயகுமார் வங்கிகணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்தார். சற்று நேரத்தில் அவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.88 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்துதான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சார்லஸ் விஜயகுமார், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின்பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சார்லஸ் விஜயகுமாரின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கி கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story