கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து:ஓட்டல் உரிமையாளர் வீட்டில் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை


கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து:ஓட்டல் உரிமையாளர் வீட்டில் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2023 7:30 PM GMT (Updated: 5 Aug 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் வீட்டில் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

குடோன் வெடி விபத்து

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த மாதம் 29-ந் தேதி பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். பட்டாசு விபத்துக்கு அருகில் இருந்த ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததே காரணம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிந்ததாக கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடி விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், நாடாளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்தார்.

அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில் வெடி விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் வீட்டில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவன சென்னை தலைமை அலுவலர் தலைமையில் 4 அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டை உள்பக்கம் தாழிட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரியின் கணவர், மகன், மருமகள், மகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கியாஸ் சிலிண்டரால் வெடி விபத்து ஏற்படவில்லை என மனு அளித்துள்ளீர்கள். சிலிண்டரால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக உங்களை போலீசார் கூற சொல்கிறார்களா? இதுகுறித்து வேறென்ன தகவல்கள் உள்ளது என்ற கோணத்தில் சுமார் 30 நிமிடம் நேரம் விசாரணை நடந்தது.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், தாசில்தார் சம்பத் ஆகியோரை வீட்டின் உள்ளே அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மாநில அரசின் விசாரணைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அதிகாரிகளை தவிர்த்துவிட்டு மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story