என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி


என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:45 PM GMT)

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கூடுதல் கட்டிடம்

கடலூர் அருகே வழிசோதனைபாளையம் ஊராட்சியில் என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் எம்.புதூர் பகுதியில் அரசு காசநோய் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வார்டை நோயாளிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்.எல்.சி.யின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.83 லட்சம் மதிப்பில் எம்.புதூரில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு 40 படுக்கை வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. என்.எல்.சி.யின் சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து பல்வேறு பணிகளை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அவர்களும் அதற்கு ஆவன செய்வதாக தெரிவித்துள்ளனர். தற்போது நடந்த பேச்சுவார்த்தையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ வசதி, பாலம் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், ரூ.100 கோடி மதிப்பில் மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்ள என்.எல்.சி. நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி குறித்து டாக்டர்கள் ஆலோசனை பெற்று, ஒரு லட்சம் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப வளர்ச்சியை என்.எல்.சி. நிறுவனம் கண்காணிக்க உள்ளது. என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அதற்கு விடிவுகாலம் கிடைத்துள்ளது. என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க, எழுத்து தேர்வில் பங்கேற்கும் போது கூடுதல் மதிப்பெண் அளிப்பதற்கும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story