கூடுதல் டி.ஜி.பி. அருண் திடீர் ஆய்வு


கூடுதல் டி.ஜி.பி. அருண் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு செய்த கூடுதல் டி.ஜி.பி. அருண் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த போலீசாரை பாராட்டினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு செய்த கூடுதல் டி.ஜி.பி. அருண் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த போலீசாரை பாராட்டினார்.

கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு

தமிழக உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அருண் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த போலீசாரை பாராட்டினார்.

தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி. அருண் போலீசாரிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது. இந்த வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர பணியாற்றி வருகிறார்கள். இதன் விளைவாக தற்போது 95 சதவீதம் ரேஷன் அரிசி கடத்தல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

பொதுமக்களுக்கு போய் சேர வேண்டிய ரேஷன் அரிசியை, வெளி மாநிலங்களுக்கு கடத்த அனுமதிக்க கூடாது. ரேஷன் அரிசி கடத்துபவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் பற்றி பொதுமக்கள் கட்டணமில்லா 1800 599 5950 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் ஆகியவை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மேலும் முடிக்கப்படாமல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அவர் அறிவுரை வழங்கினார். மேலும் போலீசாரின் குறைகளை கேட்ட அவர். அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரு, மூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story