கரும்பு தோட்டங்களில் கலெக்டர் ஆய்வு


கரும்பு தோட்டங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:46 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு தோட்டங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு தோட்டங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார். தொடர்ந்து கரும்பு கொள்முதல் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் அரிசி இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

தை பொங்கலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 ரேஷன் கடைகளில் 5,58,934 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பொருட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

முன்னேற்பாடு பணிகள்

இதற்காக தரமான அரிசி, 6 அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. கூட்டுறவு, வேளாண்மை துறை அலுவலர்களை கொண்டு வட்டார கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தரமான கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் தோட்டங்களில் இக்குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து கரும்பு தரங்களை உறுதி செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதற்காக 559 டன் அரிசி மற்றும் சர்க்கரை தயார் நிலையில் உள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் எவ்வித தொய்வு இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story