நாமக்கல் அருகே கொக்குவாரி காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


நாமக்கல் அருகே  கொக்குவாரி காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x

நாமக்கல் அருகே கொக்குவாரி காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள கொக்குவாரி சிங்களங்கோம்பை காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

தூசூர் ஏரி நிரம்பியது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் இந்த ஆண்டு தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொல்லிமலை பகுதியை நீர் ஆதாரமாக கொண்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. முக்கியமாக மாவட்டத்தின் பெரிய ஏரியான தூசூர் ஏரி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொடர்ந்து 2-வது முைறயாக நிரம்பி நீர் கடைக்கால் வழியாக வெளியேறி வருகிறது. இதனால் அருகில் உள்ள பல்வேறு ஏரிகளும் நிரம்பி வருகின்றன.

கொக்குவாரி காட்டாறு கொல்லிமலையில் இருந்து உற்பத்தியாகி சிங்களங்கோம்பை வழியாக சரப்பள்ளி ஏரியில் சென்று சேருகிறது. கடந்த சில நாட்களாக சிங்களங்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ளகொல்லிமலையின் மலை பகுதிகளில் கனமழை பெய்ததால், கொக்குவாரி காட்டாற்றில் கற்கள் உருட்டி வரப்பட்டு, ஆற்றின் பாதைமாறி விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

கலெக்டர் ஆய்வு

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பொக்லைன் எந்திரம் மூலம் கொக்குவாரி ஆற்றின் நடுவே இருந்த கற்களை அகற்றி சீரமைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதையும், கரைகள் சரிசெய்யப்பட்டு உள்ளதையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக கொண்டிசெட்டிபட்டி நகராட்சி தொடக்கப்பள்ளியின் ஒரு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், மோட்டார் மூலமாக மழைநீரை விரைந்து வெளியேற்றி நீரை வடிக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, வேட்டாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி உள்ளதையும், நீர் வெளியேற்றப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பள்ளி வளாகத்தில் மழைநீர் வராத வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, தாசில்தார்கள் சக்திவேல், செந்தில் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story