அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு


அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2022 6:45 PM GMT (Updated: 15 Oct 2022 6:46 PM GMT)

ஓசூரில் விஷ வாயு பரவி மாணவர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் விஷ வாயு பரவி மாணவர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாணவர்கள் வாந்தி, மயக்கம்

ஓசூர் காமராஜ் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி தமிழ் நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் விஷ வாயு பரவியது. இதையடுத்து, அங்கு படித்து வந்த 67 மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் ஆசிரியர்கள், பணியாளர்களும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவர்களில் பெரும்பாலான மாணவர்கள், ஆசிரியர்கள் வீடு திரும்பினர். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மருத்துவமனை மற்றும் பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் விஷ வாயு பரவியது எப்படி? என்பது குறித்து அறிய ஒரு குழு அமைத்்து உத்தரவிட்டார். இதையடுத்து குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழுவினர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று, ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அரசுபள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தொழில்நுட்ப அலுவலர்கள், மல்டி கியாஸ் டிடெக்டர், மோனாக்சைடு டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகளை கொண்டு விஷ வாயு பரவிய 6 மற்றும் 7-ம் வகுப்பறைகளில் ஆய்வு செய்தனர். மேலும், மாணவர்கள் வகுப்பில் விட்டு சென்ற புத்தகப்பைகள் மற்றும் வகுப்பறைகளில் இருந்த பொருட்கள் ஆகியவற்றையும் டிடெக்டர்கள் கொண்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் வகுப்பறையில் விஷவாயு அறிகுறி ஏதும் இல்லை. மாறாக வகுப்பறைகளில் இயற்கை நிலையிலேயே ஆக்சிஜன் இருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர். பின்னர், தொழில்நுட்ப அலுவலர்கள் அருகில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story