மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை1 லட்சத்து 61 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவுகலெக்டர் சாந்தி தகவல்


மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை1 லட்சத்து 61 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவுகலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 31 July 2023 7:30 PM GMT (Updated: 31 July 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 655 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விண்ணப்ப பதிவு முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதல் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் கடந்த 24-ந்தேதி தொடங்கி வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. கடந்த 28-ந்தேதி வரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 655 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட முகாமில் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வராமல் விடுபட்டு இருப்பவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாமல் விடுபட்ட நபர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) மற்றும் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமிற்கு வந்தால் போதுமானது. இடைப்பட்ட நாட்களில் முகாமிற்கு வர தேவையில்லை.

நேரடியாக டோக்கன்

2- ம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் வருகிற 5-ந்தேதி தொடங்கி 16- ந்தேதி வரை நடைபெறும். ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார். 2- ம் கட்ட முகாமிற்கான டோக்கன் வழங்கும் பணி வருகிற நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கும். பொதுமக்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

சரிபார்க்கப்படும்

விண்ணப்பத்துடன் எந்தவித ஆவணங்களையும் நகலெடுத்து இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் நடைபெறும். இந்த முகாமில் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் வழியாக ஒருமுறை ஓடிபி பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால் அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும். இந்த திட்டத்தில் பயன் பெற 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story