வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர், பாசன ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி ஆகிய அணைகள் உள்ளன. கொடைக்கானல், சவரிக்காடு, பாச்சலூர் ஆகிய மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பில் பெய்த தொடர் மழையால் பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதில் வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. பாலாறு-பொருந்தாறு அணையும் நிரம்பும் தருவாயில் இருந்தது. அதைத்தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பழனியில் உள்ள அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, 66.47 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணை ஏற்கனவே நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கனஅடி நீர் வரத்தாகிறது. வரத்தாகும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 65 அடி உயரமுள்ள பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 62.6 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 71 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.



Next Story