திருச்செந்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்


திருச்செந்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 10:22 AM GMT)

திருச்செந்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகுதியில் மோட்டார்சைக்கிளில் வைத்து கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் கண்காணிப்பு

திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு புகார்கள் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாலிபர் சிக்கினார்

இந்த நிலையில் போலீசார் நேற்று ஆலந்தலை சூசைநகர் ஜங்ஷன் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த லெனாக்ஸ் மகன் இருதய ஜெனிஸ் (வயது 22) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

2½ கிலோ கஞ்சா பறிமுதல்

அவரது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக வைக்குப்பட்டு இருந்த 2½ கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story