தஞ்சை மாவட்டத்தில், கருவாடு உற்பத்தி பாதிப்பு


தஞ்சை மாவட்டத்தில், கருவாடு உற்பத்தி பாதிப்பு
x

தஞ்சை மாவட்டத்தில், கருவாடு உற்பத்தி பாதிப்பு

தஞ்சாவூர்

தொடர் மழை எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.

மீன்பிடி தொழில்

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகளும் மீன்பிடிதொழில் செய்து வருகிறது. இந்த படகுகளில் தினமும் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதில் கழிவாக கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்துவருகின்றனர்.

கருவாடுகள்

உணவிற்கு பயண்படும் கருவாடுகளை விட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்புள்ளது. இந்த வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது.

மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

கருவாடு உற்பத்தி பாதிப்பு

கடந்த ஒரு வாரமாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கருவாடு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கருவாடுகளை மழையில் இருந்து பாதுகாப்பதற்காக துறைமுகத்தில் தார்ப்பாய் மூலம் மூடி வைத்துள்ளனர். இந்த தொழில் பாதிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.


Next Story