ஒடிசா ரெயில் விபத்தின்போது ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் - பூந்தமல்லி என்ஜினீயர் பேட்டி


ஒடிசா ரெயில் விபத்தின்போது  ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் - பூந்தமல்லி என்ஜினீயர் பேட்டி
x

ஒடிசா ரெயில் விபத்தின்போது ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பியதாக பூந்தமல்லியை சேர்ந்த என்ஜினீயர் கூறினார்.

காஞ்சிபுரம்

என்ஜினீயர் உயிர் தப்பினார்

சென்னையை அடுத்த பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). என்ஜினீயரான இவர், அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். தற்போது விசா சம்பந்தமாக கொல்கத்தா சென்றார். அங்கு பணியை முடித்துவிட்டு, சென்னைக்கு வருவதற்காக ஒடிசாவில் கோர விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அந்த ரெயில் விபத்தில் முருகன் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். பூந்தமல்லியில் உள்ள வீட்டுக்கு வந்த முருகனை அவரது குடும்பத்தினர் கற்பூர ஆரத்தி எடுத்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

ரெயில் விபத்தில் தான் உயிர் தப்பியது எப்படி? என்பது குறித்து முருகன் கூறியதாவது:-

10 நொடியில் முடிந்தது

நான் பயணம் செய்த எஸ்.2 பெட்டியில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து ரெயில் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் திடீரென ஒரு சத்தம், ரெயில் பெட்டிகள் சரியத்தொடங்கியது. 10 நொடியில் அனைத்தும் முடிந்து ஓய்ந்தது. ரெயில் பெட்டியில் இருந்த அனைவரும் அலறி அடித்து அங்கும், இங்குமாக பதறி ஓடினர். நான் இருந்த பெட்டியில் இருந்து வெளியேற வழி இல்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்தோம். நான் இருந்த பெட்டியில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

ஜன்னல் கம்பியை பிடித்து...

விபத்தில் ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டதால் நான் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினேன். பின்னர் ரெயில் பெட்டியில் இருந்து வெளியே வந்தோம். ஒரே இருட்டாக இருந்தது. எத்தனை ரெயில் விபத்துக்குள்ளானது என்பது கூட அப்போது தெரியவில்லை. பலர் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தனர்.

அங்கு தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா? என பார்த்தேன். பின்னர் அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் சேர்ந்து அருகே உள்ள சாலைக்கு சென்று பஸ் மூலம் புவனேஸ்வர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றோம். பின்னர் அங்கிருந்து மீண்டும் பஸ் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். நான் எப்படி உள்ளேன்? என்பதை தொடர்ந்து ரெயில்வே மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story