கோட்டூரில், உறவினர்கள் சாலைமறியல்


கோட்டூரில், உறவினர்கள் சாலைமறியல்
x

கோட்டூரில், உறவினர்கள் சாலைமறியல்

திருவாரூர்

தனியார் கல்லூரி பேராசிரியர் உடலை வாங்க மறுத்து கோட்டூரில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேராசிரியர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது47). இவரது மனைவி லலிதா (43). இவர்களுக்கு சாரதி (16) என்ற மகன் உள்ளார். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தமிழ் துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

இதனால் மஞ்சக்குடியில் சண்முகவேல் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அறுவை சிகிச்சை

இதனால் கடந்த சில மாதங்களாக குடவாசலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுமுன்தினம் சண்முகவேலுக்கு வயிற்றுவலி அதிகமானதால் குடவாசலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிசிச்சை செய்துகொண்டார். இதனால் அவரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து சண்முகவேலை உயர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.

சாலைமறியல்

இந்தநிலையில் நேற்று சண்முகவேலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சண்முகவேல் உடலை வாங்க மறுத்து கோட்டூர் அருகே ஓவர்சேரி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சண்முகவேல் மனைவி கொடுத்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story