ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.8 கோடி இழப்பீடு


ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.8 கோடி இழப்பீடு
x

மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.8 கோடி வரை இழப்பீடாக வழங்கப்பட்டது.

மதுரை


மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.8 கோடி வரை இழப்பீடாக வழங்கப்பட்டது.

லோக் அதாலத்

மதுரை ஐகோர்ட்டில் நேற்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், குமரப்பன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்தி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகள் பல்வேறு வழக்குகளை விசாரித்தன. இந்த அமர்வுகளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் உதயன், இளங்கோ, நம்பி ஆகியோரும், ஐகோர்ட்டு வக்கீல்கள் கணபதி சுப்பிரமணியன், சுரேஷ்குமார், ஐசக்பால், கிருஷ்ணவேணி ஆகியோரும் பங்கேற்றனர்.

மொத்தம் 313 வழக்குகள் சுமுக தீர்வு காண்பதற்காக எடுத்து கொள்ளப்பட்டன. முடிவில் 23 வழக்குகளில் சுமுகதீர்வு காணப்பட்டது. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சத்து 52 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை ஐகோர்ட்டு நீதித்துறை பதிவாளரும், லோக் அதாலத் பொறுப்பு அதிகாரியுமான வெங்கடவரதன் செய்திருந்தார்.

ரூ.8 கோடி இழப்பீடு

மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் நடந்தது. மாவட்ட நீதிபதி நாகராஜன், சார்பு நீதிபதி சண்முகவேல்ராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வுகள், மொத்தம் 103 வழக்குகளை விசாரித்தன. 93 வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.5 கோடியே 2 லட்சத்து 79 ஆயிரத்து 800-ஐ இழப்பீடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதன்மூலம் மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் சுமுக தீர்வு காணப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் சுமார் ரூ.8 கோடி இழப்பீடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story