முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி


முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் விஷசாராயம் குடித்த 60 பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அதில் 9 பேர் இறந்துள்ளதாக நேற்றில் இருந்து (நேற்று முன்தினம்) ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு மாவட்டம் சுக்கானூர் பெருங்கரணை பகுதியில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் இறந்துள்ள தகவலும் வந்துள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை (இன்று) காலை மரக்காணம் பகுதிக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் செல்ல இருக்கின்றேன்.

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஒரு பொம்மையான, திறனற்ற முதல்-அமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின்போது கள்ளச்சாராயம் தொடர்பாக நான் பேசியிருக்கின்றேன். அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

அதேபோன்று மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக சில பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளது. அதை பார்த்தாவது விழித்துக்கொண்டு துரிதமாக நடவடிக்கையில் இறங்கி இருந்தால் இறப்புகளை தடுத்து நிறுத்தி இருக்கலாம். இந்த கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பெடுத்துக்கொண்டு தார்மீகமாக தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டுகள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தின் டி.ஜி.பி. முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்காக 2.0 என்றும், அதன் பின்னர் 3.0 என்றும் இப்போது 4.0 என்று ஓ மட்டுமே போட்டுக்கொண்டிருக்கிறார்.

சட்ட ரீதியாக தடை செய்ய இந்த முதல்-அமைச்சருக்கு திறமை இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் திறந்து இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கடைகள் திறந்து இருந்தன. அதேபோன்று தற்போது போலி மதுபானங்களும் அதிகம் விற்கப்படுகிறது. இதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மார்பளவு உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பானுமதி துரைக்கண்ணு, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், கே.பி.முனுசாமி, சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story