ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ேநரில் ஆஜராகி விளக்கம்: "கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை"- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ேநரில் ஆஜராகி விளக்கம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது, கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மதுரை


கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது, கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம் வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 1988-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

பின்னர் இவர் தனது பணியை வரன்முறை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அவரது பணியை வரைமுறைப்படுத்தி உரிய பலன்களை வழங்க வேண்டும் என 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவு 7 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே சின்னத்தாய் இறந்தார். இதனால், அவரது மகன் பரமன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

பிடிவாரண்டு

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அப்போதைய பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அவர்கள் ஆஜராகாததால், இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவரையும் சென்னை போலீஸ் கமிஷனர் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா மற்றும் நந்தகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள்.

நீதிபதி கேள்வி

அப்போது நீதிபதி, "இந்த வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு உத்தரவை போலீசார் முறையாக நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது. இந்த நடைமுறையை சாதாரண மனிதர்களின் வழக்குகளிலும் போலீசார் கடைப்பிடிப்பார்களா? இந்த வழக்கில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆஜராக ஏன் உத்தரவிடக் கூடாது?" என கேள்வி எழுப்பினார்.

பின்னர், "இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவைதான்" என்றார்.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்தும், வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.


Next Story