திருமணமான 6 நாளில் மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை


திருமணமான 6 நாளில் மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை
x

செஞ்சி அருகே திருமணமான 6 நாளில் மனைவி இறந்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் முருகன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவருக்கும். திருவண்ணாமலை மாவட்டம் செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் சந்தியா (22) என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்தியா தனது கணவருடன் செவரப்பூண்டிக்கு விருந்துக்கு சென்றார்.

நேற்று முன்தினம் தாய் வீட்டில் இருந்த சந்தியா திடீரென மயங்கி விழுந்தாா். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டா்கள், சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலை

இதையறிந்த முருகன் கதறி அழுதார். பின்னர் இரவு சொந்த ஊருக்கு முருகன் சென்றார். மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் முருகன் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் நின்ற ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த தகவலின் பேரில் அவலூா்பேட்டை போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 நாளில் மனைவி இறந்ததால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story