நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
x

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரியில் பெய்துவரும் தொடர் கனமழையையொட்டி, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சமயங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட செயல்பாடுகள் செய்ய வேண்டாம்.

நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது, அதிக மழைப்பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அத்தகைய நேரங்களில் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். மரம் மற்றும் தடுப்பு சுவர்களின் அடியில் வாகனங்களை நிறுத்தவோ, பொதுமக்கள் நிற்கவோ வேண்டாம்.

மழைப்பொழிவின் போது மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை பொதுமக்கள் தொடவோ அருகில் செல்லவோ கூடாது, மழை காரணமாக இயற்கை இடர்பாடுகளால் பாதிப்புகள் ஏற்படும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையான 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story