கனமழை எச்சரிக்கை: `உஷாரான மக்கள்..' - சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டும் கார்கள்


கனமழை எச்சரிக்கை:  `உஷாரான மக்கள்.. - சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டும் கார்கள்
x
தினத்தந்தி 14 Oct 2024 9:39 AM GMT (Updated: 14 Oct 2024 10:45 AM GMT)

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் முன்கூட்டியே கார்களை பொதுமக்கள் நிறுத்தி வருகின்றனர்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வேளச்சேரி பாலத்தில் முன்கூட்டியே பொதுமக்கள் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர். கனமழை எச்சரிக்கையால் பாலத்தில் பொதுமக்கள் இடம்பிடித்து வரும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story