வால்பாறையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழை 2 இடங்களில் மண்சரிவு- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


வால்பாறையில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதோடு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதோடு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

கனமழை கொட்டியது

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் லேசாக தொடங்கிய மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் கன மழையாக பெய்யத்தொடங்கியது. இந்த மழை விடிய,விடிய கொட்டித்தீர்த்தது.

இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஏற்கனவே முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் சோலையாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று அதிகாலை 5 மணியளவில் 4-வது முறையாக சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட 2,000 கன அடித் தண்ணீர் கூடுதலாக வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேயிலை தோட்டங்களை சூழ்ந்த நிலையில் தண்ணீர் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்று பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சுவர் இடிந்தது- மண்சரிவு

நடுமலை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இந்த மழை காரணமாக டோபி காலனி பகுதியில் கணேசன் என்பவரின் உள்பக்க சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கருணாநிதி நகரில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. வாழைத் தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நகராட்சி மூலம் பொதுமக்கள் மற்றும் ஆன்றோர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம் தயார்

வால்பாறை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிவாரண முகாம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வால்பாறை தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் பாலு ஆகியோர் தலைமையில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். அனைத்து துறை அதிகாரிகளும் உஷார்நிலையில் இருந்து வருகின்றனர்.பொது மக்கள் அவசர தேவைகளுக்கு தாசில்தார் அலுவலகம் நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சோலையாறு அணையின் நீர் மட்டம் 163.50 அடியாக இருந்தது. சேடல்பாதை வழியாக 4,249 கன அடித் தண்ணீரும் மின் நிலையம் -1 இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்த பின் 793 கன அடித் தண்ணீரும் பரம்பிக்குளம் அணைக்கு திறக்கப்பட்டு வருகிறது. மின்நிலையம்-2 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்குப் பின் 623 கன அடிநீர் மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 1,070 கன அடிநீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

நெகமம்

நெகமம் மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அதிகாலையில் இருந்தே, பனி மூட்டத்தை போல லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழை பல மணிநேரம் நீடித்தது. இதன் காரணமாக பாதை தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். பொள்ளாச்சி-திருப்பூர் பிரதான சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. பனித்தூவல் போல் பெய்த மழையால் நீண்ட தூரத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் பள்ளி, வேலைக்கு சென்றவர்கள் அவதிப்பட்டனர்.

வால்பாறையில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- மேல்நீரார்- 142, வால்பாறை- 122, கீழ் நீரார்- 95, சோலையாறு அணை 86.


Next Story