வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு தொந்தரவு; கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு


வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு தொந்தரவு; கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
x

வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்திவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் பானு ரேகா (வயது 30). இவருக்கும் திருச்சி பொன்மலைப்பட்டி கீழஉடையார் தெருவை சேர்ந்த தங்கவேலு மகன் செந்தில் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் திருமணத்தின்போது பானு ரேகா குடும்பத்தினர் செந்திலுக்கு 70 பவுன் தங்க நகைகள், ரூ. 6 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுத்துள்ளனர். அதன்பின் 2018-ம் ஆண்டு செந்தில் மனைவி பானு ரேகாவிடம் கார் வேண்டும் எனவும், பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து தர வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்தாராம். இதைத்தொடர்ந்து பானுரேகா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இது தொடர்பாக பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் கணவர் செந்தில் தனிக்குடித்தனம் சென்று பானுரேகாவுடன் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்தார். அதன் பின்னர் செந்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இது நாள் வரை சேர்ந்து வாழவில்லை. இது குறித்து மீண்டும் நேற்று முன்தினம் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பானுரேகா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கணவர் செந்தில், மாமியார் கீதா, மாமனார் தங்கவேல், நாத்தனார்கள் திவ்யா, கனிமொழி மற்றும் அவரது கணவர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story