சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 8 Jun 2023 7:15 PM GMT (Updated: 8 Jun 2023 7:15 PM GMT)

கீழ்வேளூர் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சாராய விற்பனை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்த கொல்லக்காட்டு குமார் மனைவி பூங்கொடி (வயது50). அத்திப்புலியூர் ஊராட்சி கீழத்தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி வனஜா (49). நாகை தாலுகா ஆலங்குடி ஊராட்சி ராமாபுரம் பகுதியை சேர்ந்த தவமணி மகன் தங்கம் என்கிற வினோத் (26). இவர்கள் 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராய விற்பனை தொடர்பாக வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக பூங்கொடி, வனஜா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையிலும், தங்கம் என்கிற வினோத் நாகை மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டர் சட்டம்

3 பேரும் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜானி டாம் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை, திருவாரூர் சிறையில் இருந்த 3 பேரையும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story