ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்


ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:45 PM GMT)

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் அதன் தலைவர் சாமிதிராவிடமணி மற்றும் செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காரைக்குடி நகர் என்பது சிவகங்கை மாவட்டத்தில் முக்கியமான நகராக விளங்கி வருகிறது. இங்குள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கும், ரெயில் நிலையத்திற்கும் போதியளவில் பஸ் வசதிகள் இல்லை.

மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு கழனிவாசல்-சூரக்குடி சாலையிலும், பாண்டியன் நகர், கே.வி.எஸ். நகர், கே.கே.நகர், கம்பன் நகர், மாருதிநகர், வி.ஏ.ஓ.காலனி, தாசில்தார் நகர், ஹவுசிங்போர்ட், காவலர் குடியிருப்பு பகுதி, சகாயமாதா பள்ளி, லீடர்ஸ் பள்ளி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பஸ் வசதி இல்லை.

அரசு பஸ்கள்

அதேபோல் ஒ.சிறுவயல், பேயன்பட்டி சாலையில் உள்ள ஆவின்பால் மாவட்ட தயாரிப்பகம், மெய்யநகர், உண்ணாமலை நகர், கீரின்சிட்டி, லதா கார்டன், ராம்சுந்தர் நகர், பத்திர பதிவு அலுவலகம், மோட்டார் வாகன அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே இந்த பகுதியில் உள்ள மக்கள் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அழகப்பா கல்லூரிகள், செஞ்சை, பழைய சந்தை பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் 2 டவுண் பஸ்களை இயக்க வேண்டும் என ஏற்கனவே காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

எனவே இந்த பகுதிகளுக்கு விரைவில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


Next Story