'அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் கவர்னர் செயல்பட்டு வருகிறார்' - முத்தரசன் குற்றச்சாட்டு


அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் கவர்னர் செயல்பட்டு வருகிறார் - முத்தரசன் குற்றச்சாட்டு
x

பா.ஜ.க. ஆதரவு அரசியலை கவர்னர் மாளிகையில் இருந்து நடத்துவதை தமிழ்நாடு வினாடிப் பொழுதும் அனுமதிக்காது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்ட குறிப்புகளுடன் முதல்-அமைச்சரின் கடிதத்தை கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் சென்றுள்ளது.

"எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயார்" என அவர் அறிவித்த நிலையிலும் சட்ட முறைகளை நிராகரித்து, மனித உரிமைகளை அலட்சியப்படுத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர், உயிருக்கு போராடி வரும் நிலையில் அவரது சட்டபூர்வ கடமைகளை கவனிக்கும் பொறுப்பை அமைச்சரவை உறுப்பினர்களிடம் முதல்-அமைச்சர் பிரித்து வழங்கியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் முதல்-அமைச்சர் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னரின் சட்டப்படியான கடமைப் பொறுப்பாகும்.

ஆனால் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழ்நாடு மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்ட குறிப்புகளுடன் முதல்-அமைச்சரின் கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.

கவர்னரின் அப்பட்டமான அதிகார அத்துமீறலையும், மலிவான அரசியல் நடவடிக்கையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு அரசியலை கவர்னர் மாளிகையில் இருந்து நடத்துவதை தமிழ்நாடு வினாடிப் பொழுதும் அனுமதிக்காது என்பதை உணர வேண்டும்."

இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story