தியாகதுருகம் வார சந்தையில் ரூ 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


தியாகதுருகம் வார சந்தையில் ரூ 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x

பக்ரீத் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வார சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்தனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வியாபாரம் களை கட்டியது. ஆடுகளை வாங்கி செல்வதற்காக உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் முஸ்லிம்கள் ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் வந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகள் வைத்திருந்த ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, பக்ரீத் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்கலாம் என கருதி விவசாயிகள் பலர் தங்கள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர். அவற்றை வியாபாரிகளும், முஸ்லிம்களும் போட்டிபோட்டு வாங்கினர். இங்கு ஒரு ஆடு குறைந்த பட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.23 ஆயிரம் வரை விலை போனது. அதேபோல் ஆட்டுக்குட்டி ஒன்று குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகையையொட்டி சந்தைக்கு கூடுதல் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதனால் சுமார் ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என்றார்.


Next Story