ஆன்லைன் மூலம் கடைசி நாளில் மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி


ஆன்லைன் மூலம் கடைசி நாளில் மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி
x

ஆன்லைன் மூலம் கடைசி நாளில் மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெரம்பலூர்

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசா வரையிலும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.72 வரையிலும் அதிகரித்தது. அதன்பின்னர் 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது.

மின்கட்டணம் உயர்வு

இந்தநிலையில் மின்சார வாரியத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ெவளியிட்டார்.

அதன்படி 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது. மேலும், மின்கட்டணம் செலுத்த தவறினால் அதற்கான அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பு

இந்தநிலையில், மின்சார வாரியத்தின் ஆன்லைன் கட்டணம் செலுத்தும் சர்வர் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளில் வேலை செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

குறுஞ்செய்தி

பெரம்பலூர் பாலக்கரையை சேர்ந்த ராஜேஷ்:- வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை மாற்றி கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது டீக்கடையில் டீ குடித்தாலே பொதுமக்கள் செல்போனில் கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் அனுப்புகின்றனர். ஆனால் மின் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தும் போது சில சமயங்களில் கட்டணம் செலுத்த முடியவில்லை. மின் கட்டணம் கட்ட கடைசி தேதியின் போது ஆன்லைன் மூலம் செலுத்தும் போது கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செல்போனில் மின் கட்டணம் செலுத்த கூறி குறுஞ்செய்தி வருகிறது. இதனால் அடுத்த நாள் மின் வாரிய அலுவலக கவுண்ட்டரில் கொண்டு மின் கட்டணம் செலுத்தும் போது ஊழியர்கள் அபராதத்துடன் வசூலிக்கின்றனர். எனவே தமிழ்நாடு மின்சார வாரியம் கடைசி நாளில் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் இடையூறுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

மன உளைச்சல்

குன்னம் தாலுகா தண்ணீர் பந்தலை சேர்ந்த காசிராஜன்:- ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் போது சர்வரில் ஏற்படும் கோளாறு காரணமாக நாம் பணம் செலுத்தினாலும் அதன் தொகை மின்வாரியத்திற்கு செல்லாமல் பணம் மீண்டும் திரும்பி வந்து விடுகிறது. இதனால் தாமத கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு மன உளைச்சலும், விரைய செலவும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடைசி தேதியில் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்

அதிகாரிகள் வேண்டுகோள்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்தி செல்வதால் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனை தவிர்க்கவே இருந்த இடத்தில் இருந்து ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளில் பலர் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதால் பல்வேறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மின் வாரியத்துக்கு மின் நுகர்வோர்களின் பணம் வந்து சேருவதில்லை. இதனால் மின் நுகர்வோர்களின் வங்கி கணக்கிற்கே பணம் திரும்ப போய்விடுகிறது. இதனால் தான் அவர்களுக்கு மின் கட்டணம் செலுத்தக்கோரி குறுஞ்செய்தி வருகிறது. கடைசி தேதி முடிந்து மறுநாள் கட்டும் போது அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க மின் நுகர்வோர்கள் ஆன்லைனில் கடைசி தேதியில் மின் கட்டணம் செலுத்தாமல், அதற்கு சில நாட்களுக்கு முன்பே கட்டணத்தை செலுத்தி விடுவது நல்லது. கடைசி தேதியில் மின் கட்டணம் செலுத்த நினைக்கும் நுகர்வோர்கள் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் நேரிடையாக கவுண்ட்டருக்கு வந்து கட்டி விட்டு செல்லுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story