கோவில் விழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை


கோவில் திருவிழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

கோவில் திருவிழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கட்டிட தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த செவல்பட்டி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 33). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த அவர், தற்போது சொந்த ஊருக்கு வந்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவருடைய மனைவி சத்யா (25). அதே பகுதியை சேர்ந்தவர் முனீசுவரி (28). இவருடைய தம்பி சதீஷ் (20).

சத்யாவுக்கும், சதீசுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சதீஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பொங்கல் திருவிழா

சதீஷ் தற்கொலைக்கு பின்னர் முனீசுவரி மற்றும் மணிமாறன் குடும்பங்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்த மணிமாறன், மனைவியின் ஊரான, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடியேறினார்.

தற்போது கொட்டமடக்கிபட்டியில் உள்ள ஒரு கோவிலில் வைகாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு தனது தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மணிமாறன் ஊருக்கு வந்தார். நள்ளிரவில் கோவிலுக்கு சென்றார்.

பெண் கொலை

இதை அறிந்த முனீசுவரி, தனது கணவர் குருசாமி, மைத்துனர் சுரேஷ் ஆகியோருடன் அங்கு சென்று மணிமாறனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறன், அரிவாளால் முனீசுவரியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முனீசுவரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனீசுவரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த தகராறில் காயம் அடைந்த குருசாமி, சுரேஷ் ஆகிய இருவரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் தலைமறைவாக இருந்த மணிமாறனை தேடினர்.

இதற்கிடையே சங்கரன்கோவில் பகுதியில் மணிமாறனை போலீசார் கைது செய்தனர். கோவில் திருவிழாவில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story