கொள்ளை, போக்சோ வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொள்ளை, போக்சோ வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கொள்ளை, போக்சோ வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொள்ளை, போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளை வழக்கு

கோவில்பட்டி அய்யனேரியை சேர்ந்த 19 வயது வாலிபர் மற்றும் நாலாட்டின்புதூர் மொட்டமலையை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிரஞ்சீவி (20) ஆகிய 2 பேரையும் கொள்ளை வழக்கில் கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த செட்டிபெருமாள் மகன் முனீஸ்வரன் (25) என்பவரை தெர்மல்நகர் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமத்தை சேர்ந்த சங்கரன் மகன் ரவிசங்கர் (53) எனபவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், அய்யனேரியை சேர்ந்த 19 வயது வாலிபர், சிரஞ்சீவி, முனீஸ்வரன், ரவிசங்கர் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உட்பட 198 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story