தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்


தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Jun 2023 7:45 PM GMT (Updated: 24 Jun 2023 11:00 AM GMT)

தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

தஞ்சாவூர்

தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர்பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்டனத்திற்குரியது

வள்ளலார் குறித்து தமிழக கவர்னர் கூறிய கருத்து அவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. சனாதனம், மதவெறி, சாதி பேதம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். இந்த நிலையில், சனாதனத்தின் உச்சம் வள்ளலார் எனக்கூறி, அவர் மீது காவியை போர்த்தியுள்ளார்.

இதேபோல இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸ் தவறாக பேசியிருப்பதாக கவர்னர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த மாதிரியான போக்கை கவர்னர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கவர்னரை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

மிகப்பெரிய துரோகம்

பா.ஜ.க. 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். இந்த நிலையில் எவ்வளவு கூறினாலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் புறக்கணிப்பு, மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு போன்ற கொள்கைகளில் ஈடுபடும் பா.ஜ.க.வுடன் துணை போவது தமிழ்நாட்டுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என அ.தி.மு.க.வினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.122 கோடி முறைகேடு நடத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தகவல் சேகரித்து கூட்டுறவு துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளது. இந்த மிகப்பெரிய முறைகேடு குறித்து தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடியிருப்பதை வரவேற்கிறோம். மேலும் படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்களையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் மட்டுமல்லாமல், தேவையான அளவுக்கு பயிர்க்கடனும் வழங்க வேண்டும். இதேபோல நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடும் அமல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த முன்வராவிட்டால், தமிழக அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாநகர செயலாளர் வடிவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story