மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் விரக்தி:நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை-தேவர்சோலை அருகே பரிதாபம்


மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் விரக்தி:நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை-தேவர்சோலை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:46 PM GMT)

தேவர்சோலை அருகே மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற விரக்தியால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை அருகே மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற விரக்தியால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட செருமுள்ளி அருகே அஞ்சுகுன்னு மாணிக்கலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 43). விவசாயி. இவரது மனைவி சாரதா (40). இவர்களுக்கு 2 மகள்கள், மகன் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன்- மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

கடந்த வாரம் 2 பேருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு முதுமலை ஊராட்சி கோழிமலையில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சாரதா குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றார். இதனால் கண்ணதாசன் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் கண்ணதாசன் வீட்டுக்குள் பலத்த சத்தம் கேட்டது.

ரத்த வெள்ளத்தில்....

இதனால் அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் எழுந்து வந்து வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கண்ணதாசன் பரிதாபமாக பலியாகி கிடந்தார். மேலும் அவரது உடல் அருகே நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதைத்தொடர்ந்து தேவர்சோலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது நாட்டு துப்பாக்கியால் விவசாயி கண்ணதாசன் நெஞ்சு பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் விரக்தியில் கண்ணதாசன் விபரீத முடிவை எடுத்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

வேட்டைக்கு பயன்படுத்தினார்

அங்கு பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கண்ணதாசன் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேவர் சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து போலீசார் கூறும்போது:- தற்கொலை செய்து கொண்ட கண்ணதாசன் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதற்கு எந்த அனுமதியும் பெறாமல் கள்ளத்தனமாக வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அடிக்கடி வேட்டைக்கும் செல்வது வழக்கம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story