40 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


40 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

40 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

திருவாரூர்

திருவாரூர் காட்டூரில் 40 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வழங்கினர்.

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

திருவாரூர் அருகே காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்துெகாண்டு 5 பள்ளிகளை சேர்ந்த 40 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

ஆசிரியர்களை மதிக்க வேண்டும்

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

தமிழ்நாடு அரசானது பள்ளி கல்வித்துறையின் வாயிலாக மட்டுமின்றி, அனைத்து துறையின் வாயிலாக மாணவர்களின் எதிர்காலத்தினை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களது ஆசிரியர்களை, ஆசிரியர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காது. உங்களது இரண்டாம் பெற்றோர்களாக நீங்கள் நினைக்க வேண்டும். அவர்கள் பெற்ற குழந்தைகளை விட உங்களிடமே அதிகளவில் நேரம் செலவிடுகிறார்கள். உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஏணி படிகளாக செயல்படுகின்ற ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்றார்.

தனி திறமையை வளர்த்து முன்னேற வேண்டும்

அதனை தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில்,

பள்ளி மாணவ, மாணவிகளுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. முதல்வரின் காலை உணவு திட்டமும், நான் முதல்வன் திட்டமும் பெருமளவிலான வெற்றி பெற்ற திட்டமாகும். மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையின் மீது ஆர்வம் உள்ளதோ, அதில் தனிகவனம் செலுத்தி உங்கள் தனி திறனை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். உங்களுக்கான ஆர்வம் படிப்பை விட விளையாட்டில் என்றால் அதற்கான தனி திறமையை வளர்த்து முன்னேற வேண்டும் என்றார்.

இதில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குனர் லதா, இணை இயக்குனர் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், காட்டூர் ஊராட்சிமன்ற தலைவர் விமலா பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story