குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.4½ லட்சம் மோசடி


குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.4½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

அதிக லாபம்

திண்டிவனம் அவரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா மகன் அப்துல்கபூர் (வயது 20). இவருடைய செல்போன் எண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர், தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த நபர் தான், ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் தலைமை அதிகாரி எனவும், நாங்கள் அனுப்பும் யூ டியூப் சேனல் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனவும் கூறினார்.

இதை நம்பிய அப்துல்கபூர், அந்த நபர் கூறியவாறு ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி ரூ.2,850-ஐ பெற்றுள்ளார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் அப்துல்கபூரை தொடர்புகொண்ட நபர், குறைந்த முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி அதற்காக ஒரு லிங்கையும் அனுப்பி வைத்துள்ளார்.

ரூ.4½ லட்சம் மோசடி

உடனே அந்த லிங்கினுள் சென்ற அப்துல்கபூர், தனக்கான பாஸ்வேர்டு, பயனர் முகவரி ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, அந்த நபர் குறிப்பிட்ட டெலிகிராம் ஐடிக்கு 6 தவணைகளாக ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 594-ஐ செலுத்தினார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும், அப்துல்கபூருக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story