மேற்படிப்புக்கு கடனுதவி செய்வதாக கூறிசெஞ்சி தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடம் ரூ.2 லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


மேற்படிப்புக்கு கடனுதவி செய்வதாக கூறிசெஞ்சி தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடம் ரூ.2 லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

மேற்படிப்புக்கு கடனுதவி செய்வதாக கூறி செஞ்சி தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

பெண் டாக்டர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அப்பம்பட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண், செஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய மேற்படிப்புக்கு பணம் தேவைப்பட்டதால் கடந்த 27-ந் தேதியன்று கூகுளில் சென்று கடனுதவி பெறுவது சம்பந்தமாக தேடினார். அன்றைய தினமே அவர் தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்ததை பார்த்து அதை பயன்படுத்தியுள்ளார்.

உடனே வாட்ஸ்-அப் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து தொடர்புகொண்ட நபர், அந்த டாக்டரின் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அதன்படி அவரும் அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட மர்ம நபர், ரூ.1 லட்சம் தருவதாகவும், அதனை வங்கியில் செலுத்த நகர்வு கட்டணம், ஆவணப்பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி., வரைவோலை ஆகியவற்றுக்காக பணம் கட்ட வேண்டும் என்று கூறினார்.

ரூ.2 லட்சம் மோசடி

இதை நம்பிய டாக்டர், அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்கிற்கு தனது போன்பே, ஜிபே மூலம் 23 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 503-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற நபர், அந்த டாக்டருக்கு கடனுதவி வழங்காமல் மேலும் அதிக பணம் கட்டச்சொன்னதால் அந்த டாக்டர், தனக்கு கடன் தேவையில்லை என்றும், அதை ரத்து செய்துவிட்டு தான், இதுவரை கட்டிய பணத்தை திருப்பித்தருமாறும் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து அந்த டாக்டர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story