ஐ.டி.பெண் ஊழியரிடம் ரூ.11½ லட்சம் மோசடி


ஐ.டி.பெண் ஊழியரிடம் ரூ.11½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Sep 2023 7:15 PM GMT (Updated: 22 Sep 2023 7:16 PM GMT)

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி கோவை ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி கோவை ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதி நேர வேலை

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அகிலா (வயது35). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்ப தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் பகுதி நேர வேலையில் சேர்வதற்காக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தனது பெயர் ஈஸ்வரன் என்றும், தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தங்களது நிறுவனத்தின் யூ-டியூப் சேனலை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து, ரிவ்யூ கொடுத்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என அகிலா நம்பினார். அந்த நபர் கூறியபடி ஆன்லைன் மூலம் அனைத்து பணிகளையும் செய்தார். அதற்காக அவருக்கு சிறிய அளவில் கமிஷன் தொகை கிடைத்தது.

ரூ.11½ லட்சம் மோசடி

இந்த நிலையில் அகிலாவிடம் டெலிகிராம் செயலி மூலமாக சுஜாதா அகர்வால் என்று கூறி ஒருவர் அறிமுகம் ஆனார். அவர், டெலிகிராம் மூலம் பேசி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் டெலிகிராமில் லிங்க் அனுப்பி கிரிப்டோ கரன்சியில் எவ்வாறு முதலீடு செய்வது போன்ற விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அகிலா ரூ.2,100 முதலீடு செய்து உள்ளார். இதற்காக அவருக்கு லாபத்துடன் சேர்ந்து ரூ.3100 அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. முதலில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்தது என்பதால் இதை அவர் உண்மை என்று நம்பினார்.

இதையடுத்து அவர் சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரத்தை முதலீடு செய்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு செலுத்திய பணமும், லாபத்தொகையும் கிடைக்கவில்லை. அந்த நபரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அகிலா, அதிர்ச்சிஅடைந்தார். இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரி பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, இதுபோன்று செல்போன் வாட்ஸ்- அப் செயலி, டெலிகிராம் செயலியில் குறுந்தகவல் வந்தால் அதை உண்மை என்று நம்பி சம்பந்தப்பட்ட ஆசாமிகளை தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என்றனர்.


Related Tags :
Next Story