மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி


மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:46 PM GMT)

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரை போட்டி வருகிற 13-ந்தேதி நடப்பதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரை போட்டி வருகிற 13-ந்தேதி நடப்பதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டுரை-பேச்சு போட்டி

தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் வைத்த ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

அதன்படி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, தனியார் பள்ளி ஆகிய மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு திருவாரூர் கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடக்கிறது.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம்

இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி தேர்வு செய்வார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், தமிழ்த்திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடக்கிறது.

போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story