சதுரகிரியில் திடீர் வெள்ளம்... பக்தர்கள் சிக்கித்தவிப்பு


சதுரகிரியில் திடீர் வெள்ளம்... பக்தர்கள் சிக்கித்தவிப்பு
x

சதுரகிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இறுதி நாளான இன்று சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து மலைப் பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

இந்நிலையில் மாலை திடீரென பெய்த கனமழையினால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளான சங்கிலிபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் ஒடை உள்ளிட்ட நீரோடை பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மழை பெய்தவுடன் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களை கோவில் இருந்து இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மலைக்கு முன்னதாக சாமி தரிசனம் செய்துவிட்டு இறங்கிய பக்தர்கள் ஆபத்தான சங்கிலி பாறை ஒடை, மாங்கனி ஓடை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அந்த ஓடைகளை கடக்க முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு நீரோடை பகுதிகளை பக்தர்கள் கடக்க வேண்டாம் என எச்சரித்தனர். அப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக மீண்டும் நீரோடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் பக்தர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


Next Story