திறந்தவெளி மைதானங்களில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி


திறந்தவெளி மைதானங்களில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி
x
சேலம்

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திறந்த வெளி மைதானங்களில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

திறந்தவெளி மைதானம்

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் 170 பட்டாசு கடைகளுக்கும், ஊரக பகுதிகளில் 470 பட்டாசு கடைகளுக்கும் இதுவரை தற்காலிக அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடியிருப்புகள் அதிகம் இல்லாத பகுதிகள், பணியிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் இல்லாத திறந்தவெளி மைதானங்களில் பாதுகாப்பு நலன்கருதி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கான திறந்தவெளி இடங்கள் முடிவு செய்யப்பட்டு அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப் படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதி ரத்து

அந்தவகையில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பட்டாசு கடைகளுக்கான அனுமதியினை வழங்கும்போதே விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக, பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலோ, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த பட்டாசு கடையின் அனுமதியை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு குடோன்கள் அனுமதி பெற்று செயல்பட்டு வந்தால் அவற்றையும் பாதுகாப்பு நலன் கருதி குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு, இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதன் அவசியம் குறித்தும், அதிகமான பட்டாசு ஒலியால் முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு இடையூறு இல்லாத வகையிலும், பறவை, விலங்கினங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையிலும், காற்றில் கார்பன் அதிகளவில் கலந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பசுமை பட்டாசுகள் விற்பனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, துணை காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், உதவி கலெக்டர்கள் மற்றும் அனைத்து தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story