கரூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ


கரூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

கரூர்

குப்பைக்கிடங்கு

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து இந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் இந்த குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த கரூர், புகழூர் தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி குப்பைக்கிடங்கிற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் காற்றின் வேகத்தால் தொடர்ந்து தீ பரவி எரிந்து கொண்டே இருந்தது.

போராடி அணைத்தனர்

இதையடுத்து, பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை கிளறியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மாலை 5 மணி வரை போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.

குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயினால் கரூர்-வாங்கல் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனைதொடர்ந்து வாங்கல் சாலையில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.


Related Tags :
Next Story