மாநகராட்சி குப்பை கிடங்கில் மீண்டும் தீ


மாநகராட்சி குப்பை கிடங்கில் மீண்டும் தீ
x

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

கரூர்

மாநகராட்சி குப்பை கிடங்கு

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் கடந்த 31-ந்தேதி மாலை இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து 6 நாட்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அைணத்தனர்.

போக்குவரத்து மாற்றம்

இந்நிலையில் கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று மதியம் மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக குப்பை கிடங்கிற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தின் காரணமாக கரூர்- வாங்கல் சாலை புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க பேரிகார்டு அமைத்து போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதையடுத்து இந்த தீயானது இரவு 7 மணி அளவில் முழுமையாக அணைக்கப் பட்டது.


Related Tags :
Next Story