முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்


முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
x

பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்

பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முககவசம்

கொரோனா நோய் பெருந்தொற்று பாதிப்பு தற்போது கணிசமாக உயர தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்.

அதேபோல பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுதல் மிக அவசியமாகும்.

ரூ.500 அபராதம்

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணி புரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

பஸ் பயணிகள்

அரசு மற்றும் தனியார் பஸ்களில் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்து பயணம் செய்வதை கண்டக்டர் கண்காணிக்க வேண்டும். இதனை அந்தந்த பணிமனை கிளை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்துவருவதை கோவில் நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.

திரையரங்குகளுக்கு வருவோர் முககவசம் அணிந்து இருப்பதை அந்தந்த திரையரங்கு உரிமையாளர்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடைவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு எந்தவித அச்சமுமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்கள் கொரோனா தொற்று பராவாமல் தடுக்க அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story