மாடுகள் மாலை தாண்டும் திருவிழா


மாடுகள் மாலை தாண்டும் திருவிழா
x

தோகைமலை அருகே மாடுகள் மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.

கரூர்

திருவிழா

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மணச்சணம் பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு உடுமலைசீல் நாயக்கர் மந்தையில் மாரியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாரியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர்.

இதையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் 8 நாள் விரதம் இருந்து உடுமலைசீல் நாயக்கர் மந்தையில் உள்ள மாரியம்மன் மற்றும் முத்தாலம்மன் சாமிகளுக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் மாரியம்மன் மற்றும் முத்தாலம்மன் சாமிகளுக்கு கரகம் பாலித்து தாரை தப்பட்டை, உருமி மேளம் முழங்க, வாணவேடிக்கையுடன் வீதிஉலா வந்து கோவிலில் குடிபுகுந்தது.

மாலை தாண்டும் நிகழ்ச்சி

2-ம் நாள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 3-ம் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகை தந்த 19 மந்தையர்களுக்கு உடுமலைசீல்நாயக்கர் மந்தை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் முன்பாக அனைத்து மந்தைகளின் சலை எருது மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, உருமி முழங்க உடுமலைசீல்நாயக்கர் மந்தை எதிரே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

வெற்றி பெற்ற எருதுகள்

அங்கிருந்து உடுமலைசீல்நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட மரத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 200-க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் கரூர் மாவட்டம் கூடலூர் நடுப்பள்ளம் பகுதியை சேர்ந்த பேரூர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. 2-வதாக திருச்சி மாவட்டம் எலமணம் ராஜகோடங்கிபட்டி மந்தை மாடு ஓடிவந்து வெற்றிப்பெற்றது. அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை முதலாவதாக ஓடி வந்த சலை எருது மாடு மீது தூவி வரவேற்று எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் மாரியம்மன், முத்தாலம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மற்றும் முத்தாலம்மன் கரகங்களை மஞ்சள் நீராட்டுடன் வீதிஉலாவாக எடுத்துச்சென்று சாமிக்கு வழி அனுப்பி வைத்தனர். இதில் மந்தாநாயக்கர் வெற்றி, ஊர்நாயக்கர் குப்புசாமி உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story