ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
ஆனி திருமஞ்சன விழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்றது.
இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடைபெறுகிறது.
மகா அபிஷேகம்
விழாவின் முக்கிய நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி நடக்கிறது. அப்போது சாமிக்கு பழங்கள், நறுமண பொருட்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனமும், மகா தீபாராதனையும் நடக்கிறது.
இதையடுத்து இரவு 8 மணிக்கு திரு ஆபரண அலங்கார காட்சியுடன் அம்மையப்பன் திரு நடன உலா மற்றும் கோபுர தரிசனம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனி திருமஞ்சன விழா குழுவினர், அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.