கிராம கோவில் பூசாரிகள் உண்ணாவிரதம்
கிராம கோவில் பூசாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் 406-வது வாக்குறுதியாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அந்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை கடந்த பின்னரும் நிறைவேற்றவில்லை, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், செயல்படாமல் உள்ள கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும், அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் அன்புமாறன் தலைமை தாங்கினார். மடாதிபதி சேதுராமன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், ராமேசுவரம் கணேசன், மண்டலஅமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.