விவசாயிகள் கருப்பு துண்டுடன் தரையில் அமர்ந்து தர்ணா


விவசாயிகள் கருப்பு துண்டுடன் தரையில் அமர்ந்து தர்ணா
x

விவசாயிகள் கருப்பு துண்டுடன் தரையில் அமர்ந்து தர்ணா

தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு துண்டு அணிந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காணாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பும் செய்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருப்பு துண்டு

கூட்டம் தொடங்கியதும், விவசாயிகள் அனைவரும் எழுந்து, கலெக்டர் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் அனைவரும் கருப்பு துண்டும் அணிந்திருந்தனர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:-

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினை கண்டித்தும், விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை கேட்டும், வங்கி சிபில் பிரச்சினையை தீர்க்க கோரியும் கரும்பு விவசாயிகள் ஆலை முன்பாக கடந்த 59 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆலை திருஆரூரான் நிறுவனத்திடமிருந்து கால்ஸ் நிறுவனத்துக்கு மாற பெரும்பாலான விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்க்கரை ஆலை துணை இயக்குனருக்கு மாவட்ட நிர்வாகம் உண்மைக்கு புறம்பான தகவலை அறிக்கையாக வழங்கியுள்ளது.

வெளிநடப்பு

விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டு பின்னர் ஆலையை மற்றவரிடம் விற்கலாம் என மாவட்ட நிர்வாகம் யோசனையை வழங்கவில்லை. கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை, போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடிமைகளாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தையும், கால்ஸ் நிறுவனத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகை அனைத்தும் பெற்றுத்தரப்படும். இதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Related Tags :
Next Story