தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்


தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2023 8:00 PM GMT (Updated: 8 Aug 2023 3:14 AM GMT)

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், கள்ளிமந்தையம், தேவத்தூர், சிக்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள், மனு கொடுத்தனர். அந்த மனுவில், கள்ளிமந்தையம், தேவத்தூர், சிக்கமநாயக்கன்பட்டி கிராமங்களில் 920 ஏக்கர் விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க திட்ட பணிகள் நடக்கிறது. இந்த திட்டத்துக்கு இதுவரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை. இந்த பகுதியில் காய்கறிகள், கண்வலி கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிரிட்டு வருகிறோம். மேலும் பெருந்துறை, ராணிப்பேட்டை, கடலூர் உள்பட பல்வேறு இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, மக்கள் வாழ முடியாத நிலை நிலவுகிறது. எனவே கள்ளிமந்தையம் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட வேண்டும். இதன்மூலம் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story