நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் விவசாயிகள்


நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் விவசாயிகள்
x

சாலியமங்கலம் பகுதியில் உலர் களம் வசதி இல்லாததால் நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

முப்போகம் நெல் சாகுபடி

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 2,500 ஏக்கரில் குறுவை, சம்பா மற்றும் கோடை சாகுபடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது இப்பகுதியில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

சாலையில் கொட்டி காய வைக்கின்றனர்

அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர் களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் நெல்லை நெடுஞ்சாலையில் கொட்டி காய வைத்து வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்துவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதோடு, தொழிளாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலியமங்கலம் பகுதியில் நெல்லை உலர்த்த உலர் களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும் சிரமம்

இதுகுறித்து சாலியமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சாலியமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை காயவைக்க உலர் களம் இல்லை.

இதேபோல் அரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லை. நெல்லை நன்கு காயவைத்து எடுத்து சென்றால்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் என்பதால் மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகிறோம்.

உலர் களம் அமைக்க வேண்டும்

இதன் காரணமாக அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்டி காய வைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேறு வழியில்லை. நெல்லை உலர்த்த உலர் களம் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றனர்.


Next Story